சென்னை: அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் பொன்முடியுடன் மூத்த அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு. ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, சி.வி.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பொன்முடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் ஆகியோரும் பொன்முடியுடன் சந்தித்து பேசினர். இந்நிலையில், திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
அமலாக்கத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை:
அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை. அமலாக்கத்துறை என்பது பாஜகவின் கைப்பாவையாக உள்ளது என்று தெரிவித்தார்.
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொள்ள பொன்முடி தயார்:
ஒன்றிய அரசின் நடவடிக்கை முற்றிலும் தவறான நடவடிக்கை என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்திருக்கிறார். அமைச்சர்கள் பொன்முடிக்கு எந்த அச்சமும் இல்லை; சட்டப்படி எதிர்கொள்வார். மடியில் கனமில்லாததால் அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொள்ள பொன்முடி தயாராக உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜகதான்:
உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜகதான்; எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பணம் எங்கிருந்து வந்தது? என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊழலில் பாஜக மிக உயரத்தை தொட்டுவிட்டது என்றும் கூறினார்.
பாஜக கூட்டணியின் 37வது கட்சி அமலாக்கத்துறை:
பாஜக கூட்டணியில் 37வது கட்சியாக அமலாக்கத்துறை இணைந்துள்ளது. அமலாக்கத்துறையை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சி செய்கிறது என்று டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுக-வை களங்கப்படுத்த அமலாக்கத்துறை ஏவப்படுகிறது:
திமுக-வை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள். பொன்முடிக்கு தொல்லை கொடுப்பதால் அவருக்கு ஆறுதல் கூற வந்தோம். அமலாக்கத்துறை திட்டமிட்டு 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய விசாரணையை அதிகாலை 3 மணி வரை நீட்டித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆலோசனை முடிவுகள் மக்களுக்கு சென்றடைவதை தடுக்கவே திட்டமிட்டு செயல்படுகின்றனர் என்றும் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.