Tuesday, June 18, 2024
Home » கோவில்பட்டியில் காவலர்கள் பற்றாக்குறையால் காட்சி பொருளான புறக்காவல் நிலையங்கள், சோதனை சாவடிகள்

கோவில்பட்டியில் காவலர்கள் பற்றாக்குறையால் காட்சி பொருளான புறக்காவல் நிலையங்கள், சோதனை சாவடிகள்

by Lakshmipathi

*விரைந்து நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கோவில்பட்டி : கோவில்பட்டியில் காட்சி பொருளாக காணப்படும் புறக்காவல் நிலையங்கள், சோதனை சாவடிகளில் போதிய காவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நகரமாகும். தொழில், கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்காக பல்வேறு பகுதியில் இருந்து கோவில்பட்டிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோவில்பட்டி நகரில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு குற்றங்களை தடுக்கும் வகையிலும், மக்களின் பிரச்னைகளை விரைந்து தீர்க்கும் வகையிலும் கோவில்பட்டி நகரில் அண்ணா பஸ்நிலையம், புதுக்கிராமம், பாரதி நகர் மற்றும் கடலையூர், வானரமுட்டியில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அதேபோன்று கோவில்பட்டி – சாத்தூர் சாலை, கோவில்பட்டி – ராஜபாளையம் சாலை ஆகியவற்றிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் வேகமாக செயல்பட்ட புறக்காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகள் தற்போது வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகின்றன. புறக்காவல் நிலையங்கள் திறந்து பல மாதங்கள் ஆகிவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சோதனை சாவடியில் பெயரளவிற்கு மட்டும் வந்து செல்வதாகவும், கோவில்பட்டி – சாத்தூர் சாலையில் உள்ள சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா சேதமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோவில்பட்டி நகரில் நாளுக்குநாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் புறக்காவல் நிலையங்களும், சோதனைச்சாவடிகளும் காட்சி பொருளாக இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து காவல்துறையில் கேட்டால் காவலர்கள் பற்றாக்குறை என காரணம் கூறுகின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப கோவில்பட்டியில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் இல்லை என்பது குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இருக்கின்ற காவலர்களும் அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள் என பாதுகாப்பு பணிக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. எனவே மக்கள் தொகைக்கு ஏற்ப கோவில்பட்டியில் உள்ள காவல் நிலையங்களில் போலீசார் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட புறக்காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் காவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

16 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi