மன்னார்குடி: மணிப்பூர் கொடூரத்தை கண்டித்து மன்னார்குடியில் கல்லூரி மாணவிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணிப்பூரில் 2 மாதத்துக்கு மேலாக நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டிப்பது, இதற்கு நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் கல்லூரி வாசலில் மாணவிகள் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவி சங்க தலைவர் நிஷாந்தினி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மதத்தின் பெயரால் மக்களை மோதவிடும் வெறுப்பு அரசியலை ஒன்றிய பாஜ அரசு கைவிட வேண்டும். கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து தூக்கிலிட வேண்டும். மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மணிப்பூர் பாஜ அரசை கலைக்க வேண்டும். பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். மணிப்பூர் சம்பவத்துக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.