Thursday, May 30, 2024
Home » 6 மாநில பேரவை இடைத்தேர்தலில் காங்கிரசில் இருந்து பாஜவுக்கு தாவிய 10 பேருக்கு வாய்ப்பு

6 மாநில பேரவை இடைத்தேர்தலில் காங்கிரசில் இருந்து பாஜவுக்கு தாவிய 10 பேருக்கு வாய்ப்பு

by Ranjith

புதுடெல்லி: 6 மாநில இடைத்தேர்தல்களில் 2 மாநிலங்களில் காங்கிரசில் இருந்து பாஜவுக்கு தாவிய 10 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.  இமாச்சலபிரதேச காங்கிரஸ் ஆட்சியில் உள்கட்சி பூசல் காரணமாக கடந்த மாதம் 27ம் தேதி நடந்த மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிருப்தி பேரவை உறுப்பினர்களான சுதிர் சர்மா, ரவி தாக்கூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லகன்பால், சேதன்யா ஷர்மா மற்றும் தேவிந்தர் குமார் பூட்டோ ஆகிய 6 பேரும் பாஜவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர்கள் 6 பேரும் கடந்த 23ம் தேதி பாஜவில் இணைந்தனர். இதேபோல் குஜராத் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், போர்பந்தர் தொகுதி உறுப்பினருமான அர்ஜூன் மோத்வாடியா கடந்த 4ம் தேதி தனது பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து காங்கிரசில் இருந்து விலகிய அவர் கடந்த 5ம் தேதி பாஜவில் இணைந்தார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரவிந்த் லதானி, சதுர்சிங் சாவ்தா, சிராக் படேல் ஆகியோரும் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி அண்மையில் பாஜவில் ஐக்கியமாகினர். இந்நிலையில் இமாச்சலபிரதேசம் 6, குஜராத் 5, மேற்குவங்கத்தில் 2, கர்நாடகா 1, சிக்கிம் 9 ஆகிய இடங்களுக்கு பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இமாச்சலபிரதேச இடைத்தேர்தலில் பாஜவில் இணைந்த காங்கிரசில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 பேருக்கும், குஜராத்தில் அர்ஜூன் மோத்வாடியா உள்ளிட்ட 4 பேருக்கும் பேரவை இடைத்தேர்தலில் பாஜ வாய்ப்பு அளித்துள்ளது.

பாஜவில் இருந்து முன்னாள் அமைச்சர் மார்கண்டா விலகல் இமாச்சலபிரதேசத்தில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜ ஆட்சியில், விவசாயம் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த, ராம்லால் மார்கண்டா நடைபெற உள்ள பேரவை இடைத்தேர்தலில் லாஹவுல் மற்றும் ஸ்பிதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் அவருக்கு பதிலாக அந்த தொகுதியில் அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்த ரவி தாக்கூரை வேட்பாளராக பாஜ அறிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த ராம்லால் மார்கண்டா நேற்று பாஜவில் இருந்து விலகினார். இவர் காங்கிரசில் இணைய உள்ளதாகவும், வரும் பேரவை இடைத்தேர்தலில் லாஹவுல் மற்றும் ஸ்பிதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi