புதுடெல்லி: அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது ஆகியவை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ளது. அதேபோன்று இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட சிவில் சூட் மனுவும் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் அவரது ஆதரவாளர் புகழேந்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை மனுவை நேற்று கொடுத்துள்ளார்.. அதில், ‘மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் தனக்கு இரட்டை இலை சின்னத்தை போட்டியிடும் விதமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இல்லையென்றால் அதனை யாருக்கும் ஒதுக்காமல் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து அதனை நிறுத்தி வைத்து விட்டு ஒரு பொதுவான சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி ஒரு சூழல் ஏற்படும் பட்சத்தில் எங்களுக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் விரைவில் ஒரு இறுதி முடிவை தலைமை தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.