புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு கணினி மென்பொருள்களை வாங்கியது. இதில் ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஏர் இந்தியா தலைமை விஜிலென்ஸ் அதிகாரி நடத்திய விசாரணையில் டெண்டர் நடைமுறையை பின்பற்றாமல் விதிகளை மீறி எஸ்ஏபி ஏஜியிடமிருந்து மென்பொருள் வாங்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது.
அதனடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனம், ஜெர்மனி நாட்டின் எஸ்ஏபி ஏஜி மற்றும் உலகளாவிய கணினி நிறுவனமான ஐபிஎம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் ஏர் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை நிர்வாக இயக்குநர் அரவிந்த் ஜாதவ், ஐபிஎம் இந்தியா பிரைவேட் லிமிடெட், எஸ்ஏபி இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குநர்கள் உள்பட 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.