லண்டன்: ‘சிறுவயதில் நானும் இனவெறியின் வலியை அனுபவித்துள்ளேன்’ என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வேதனையுடன் கூறி உள்ளார். இங்கிலாந்தில் 210 ஆண்டுகால வரலாற்றில் பிரதமரான முதல் இந்திய வம்சாவளி, இந்து மதத்தை சேர்ந்தவர், இளம் பிரதமர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் ரிஷி சுனக். இவரும் சிறு வயதில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக தனது வேதனையாக அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சுனக்கின் தாத்தா, பாட்டி இருவரும் கிழக்கு ஆப்ரிக்காவுக்கு புலம்பெயர்ந்து பின் 1960களில் இங்கிலாந்துக்கு குடியேறிவர்கள். இந்நிலையில், ஐடிவி நியூஸ் சேனலில் பேட்டி அளித்த சுனக், ‘‘சிறுவயதில் நானும் இனவெறியை அனுபவித்துள்ளேன். என்னுடைய தம்பியையும், தங்கையையும் சிலர் மோசமாக விமர்சிப்பதை கேட்டு வேதனை அடைந்துள்ளேன்.
நாங்கள் வித்தியாசமானவர்கள் என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். நாங்கள் பேசும் போது எங்களின் உச்சரிப்பில் எந்த வித்தியாசமும் தெரிந்து விடக்கூடாது என்பதில் என் அம்மா கூடுதல் கவனம் செலுத்தினார். இதற்காக சிறப்பு வகுப்புகளுக்கு எங்களை அனுப்பி சரியாக பேச பயிற்சி கொடுக்கச் செய்தார். நாங்கள் வார்த்தைகளை சரியாக உச்சரிப்பதையே அவர் விரும்பினார். இதற்கு முன், சிறுபான்மையினர் ஒருவர் இங்கிலாந்தில் பிரதமராக வந்ததில்லை. எனவே அப்படி ஒருவர் பிரதமர் ஆவார் என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. எந்தவிதமான இனவெறியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் சந்தித்த வேதனையான அனுபவங்களை என் பிள்ளைகள் எதிர்கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன்’’ என்றார்.