சேலம்: அண்ணாமலை பொய்யாக பேசும் ஒவ்வொரு முறையும் வழக்கு தொடருவேன், இப்போது வீராப்பு பேசுபவர் ஐகோர்ட்டில் கதறியது ஏன் என்று சமூக ஆர்வலர் பியூஸ் கூறினார். சேலம் சமூக ஆர்வலர் பியூஸ், ஜேஎம் 4வது நீதிமன்றத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்த வழக்கில், முத்துராமலிங்கதேவர் சொல்லாததை சொன்னதாக கட்டுக்கதைகளை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தி, அண்ணாமலை மீது 2 சமுதாயத்திற்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அரசின் அனுமதி வாங்க உத்தரவிட்டது. இதையடுத்து அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி கேட்டு பியூஸ் மனு அனுப்பினார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு செயலாளர் நந்தகுமார் அண்ணாமலை மீது வழக்கு தொடரலாம் என அனுமதியளித்தார். இந்த நகல் பியூசிற்கு வந்தது. இதையடுத்து அவர் அந்த நகலை நேற்று 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். இன்று அந்த மனு விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பியூஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாஜ தலைவர் அண்ணாமலை மீது வழக்கு போட்டது திமுக அல்ல, நான் தான். 5 மாதம் காத்திருந்து அரசிடம் இந்த அனுமதியை பெற்றிருக்கிறேன். அண்ணாமலை பேசுவது எல்லாமே பொய். உண்மையே கிடையாது. தற்போது மீண்டும் பேசுவேன் என கூறி இருக்கிறார். அவர் பொய்யாக பேசும் ஒவ்வொரு முறையும் அவர் மீது வழக்கு தொடருவேன். இவ்வளவு வீராப்பாக பேசும் அண்ணாமலை, ஏற்கனவே நான் தொடுத்த ஒரு வழக்கின் போது ஐகோர்ட்டில் எனக்கு உடல் நலம் சரியில்லை, மன நிம்மதியும், இல்லாமல் போய்விட்டது என கதறினார். அவர் பேசுவது உண்மை என்றால் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியது தானே’ என்றார்.