மரக்காணம்: மரக்காணம் அருகே காதலனுடன் மகள் மாயமானதால் மன உளைச்சலில் தாய் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காணிமேடை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(38) விவசாயி. இவரது 17 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்துள்ளார். அந்த மாணவி கடந்த 9ம் தேதி மாயமாகி விட்டார்.
மகளை தங்கள் கிராமத்தைச் சேர்ந்த கோபி(24) என்பவர் தான் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரிடமிருந்து மீட்டு தரும்படியும் மரக்காணம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் அலைக்கழிப்பு செய்ததாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மாணவியின் தாய் வனிதா(35) நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மரக்காணம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று காலை, வனிதாவின் உடலை மரக்காணம்-திண்டிவனம் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். மாணவியை கடத்திய கோபியை உடனடியாக கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தபின் அவர்கள் கலைந்த சென்றனர். இதன் காரணமாக மரக்காணம்-திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது