விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்தவர் அங்கம்மாள் (65). நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ராஜ்குமார் (31) தனியார் பள்ளி வேன் டிரைவர். போதைக்கு அடிமையான ராஜ்குமார், கடந்த 9ம் தேதி விருதுநகரில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
நேற்று காலை 6.50 மணியளவில் அந்த மையத்தில் இருந்து அங்கம்மாளுக்கு போன் செய்து, ராஜ்குமார் காலையில் எழுந்திருக்கவில்லை. அதனால் தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக தெரிவித்தனர். இதன்பிறகு, திடீரென காலை 7.30 மணிக்கு போன் செய்து ராஜ்குமார் இறந்துவிட்டதாக கூறினர்.
அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் விருதுநகர் சூலக்கரை போலீசில், மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அந்த மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறியுள்ளார்.