சென்னை: சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் சார்பாக உயர்கல்வித் துறை குறித்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் பிரிட்டிஷ் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தமிழ்நாட்டு துணைவேந்தர்களும் பங்குபெற்று கலந்துரையாட உள்ளனர். இதன் தொடக்க நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக், பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பிரிட்டன் பன்னாட்டு அரசு கல்வித்துறை சாம்பியன் ஸ்டீவ் ஸ்மித், பிரிட்டிஷ் கவுன்சிலின் தென் இந்தியா இயக்குனர் ஜனக புஷ்பநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில், இரு நாட்டு மாணவர்கள், ஆசிரியர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் தென் இந்தியா இயக்குனர் ஜனக புஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் 2 நாடுகளுக்கும் இடையே கல்வி வளர்ச்சிக்கான ஏற்பாடுகளை எப்படி செய்வது? கல்வி உறவுகளை அதிகரிப்பது எப்படி? என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், இங்கிருந்து மாணவர்கள் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களுக்கு படிக்கலாம் என்றார்.