சென்னை: பாஜவுக்கு ஆதரவு தெரிவித்து சரத்குமார் வணிகர்களுக்கு துரோகம் செய்துவிட்டார், என எர்ணாவூர் நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார். சமத்துவ மக்கள் கழகத்தின் 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்து, கொடியேற்றி நிர்வாகிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சியின் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் செய்த சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி 40க்கு 40 என்ற வெற்றியை இலக்காக வைத்து பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தீவிர திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வரியால் வணிகர்களை வஞ்சித்துவரும் நிலையில் சரத்குமார் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்களுக்கு துரோகம் செய்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் ஆணையர் ராஜினாமா என்பது மோடி அரசின் நெருக்கடியே காரணம் என்றார். இதில் இளைஞரணிச் செயலாளர் கார்த்திக், பொருளாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.