திருவனந்தபுரம் : சபரிமலை செல்வதற்காக 41 நாள் விரதமிருந்து வரும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாதிரியார் மனோஜுக்கு சர்ச்சில் திருப்பலி உள்பட சடங்குகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் எதிர்த்தாலும் சபரிமலை சென்றே தீருவேன் என்று பாதிரியார் கூறியுள்ளார். திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் உச்சக்கடை பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (50). பாதிரியாரான இவர் ஆங்கிலிக்கன் என்ற கிறிஸ்தவ சபையை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் பாதிரியார் மனோஜுக்கு 41 நாள் விரதமிருந்து இருமுடி கட்டி சபரிமலை செல்லும் ஆவல் ஏற்பட்டது. இதன்படி கடந்த மாதம் முதல் சொந்த ஊரில் மாலையிட்டு கடும் விரதத்தை தொடங்கினார். தினமும் காலையிலும், மாலையிலும் குளித்து வீட்டுக்கு அருகிலுள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். 41வது நாளான வரும் 20ம் தேதி இவர் சபரிமலை செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் பாதிரியார் மனோஜுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சில் திருப்பலி உள்பட சடங்குகள் நடத்த பாதிரியார் மனோஜுக்கு ஆங்கிலிக்கன் சபை தடை விதித்துள்ளது. மேலும் அவருக்கு சபை சார்பில் கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டையும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனாலும், யார் எதிர்த்தாலும் தான் சபரிமலை செல்வது உறுதி என்று பாதிரியார் மனோஜ் கூறியுள்ளார்.