Monday, May 20, 2024
Home » வேண்டவே வேண்டாம்…

வேண்டவே வேண்டாம்…

by Lavanya

மாறுபட்ட உணவுப் பழக்கவழக்கம் என்பது உடலைக் கெடுக்கும் விசயங்களில் ஒன்று. இந்தப் பழக்கம் இந்த தலைமுறையினருக்கு அதிகமாகவே இருக்கிறது. மிட் நைட் பிரியாணி எனச் சொல்லிக்கொண்டு நடு இரவில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு உணவு செரிமானம் ஆகாமல் தவிப்பது, என்னவென்றே தெரியாமல் புதிதாக விளம்பரம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட ஆசைப்படுவது, சுவைக்காக சரியாக வேகாத இறைச்சிகளை சாப்பிடுவது என பல புதிய தேவையில்லாத உணவுப் பழக்கங்கள் நடைமுறையில் மிகவும் மோசமான பழக்கமாக இருக்கிறது. அந்த வரிசையில்தான் திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஸ்மோக் பிஸ்கட் மற்றும் உணவுகளை உட்கொள்வதும் அடங்கி இருக்கிறது. பல உயர்தர உணவகங்களில் குழந்தைகளை கவருவதற்காக இந்த திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட் மட்டும் ஐஸ்கிரீமை வைத்திருப்பார்கள். குழந்தைகள் சாப்பிட்டு முடித்தவுடன் இந்த திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட்டை அவர்களாகவே சாப்பிடக் கொடுக்கிறார்கள். இந்த பிஸ்கட்டை சாப்பிடும்போது வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வெளிவரும். இப்படி புகை வருவது அவர்களுக்குப் பிடித்துப்போகவே குழந்தைகள் மீண்டும் மீண்டும் அந்த உணவகத்திற்கு சாப்பிடுவதற்கு அழைத்துச் செல்ல வீட்டில் அடம்பிடிக்கும்.

இதுவொரு வியாபார உத்தியாக இருந்தபோதிலும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சிதரும் விசயமாக இருந்தது. அதனால் இந்த திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளை சாப்பிடுவது பற்றி யாரும் பெரிதாக குரல் கொடுக்கவில்லை. ஆனால், சமீபத்தில் இந்த திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்ட குழந்தை ஒன்று மயக்கம் அடைந்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு காப்பாற்றப் பட்டுள்ளது. அதேபோல, சில வருடங்களுக்கு முன்பு ஹரியானாவில் தொழிலதிபர் ஒருவர் திரவ நைட்ரஜனை பானத்தில் கலந்து குடித்து பேச்சு மூச்சில்லாமல் சென்று இறுதியாக அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றி இருக்கிறார்கள். இப்படி திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்வதால் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்டிருப்போம். விசயம் இப்படி இருக்க தமிழகத்தில் இந்தவகை பிஸ்கட் மற்றும் ஐஸ்கிரீம் விற்கப்படும் உணவகங்களில் சோதனை செய்து வருகிறது உணவு கட்டுப்பாட்டுத்துறை. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என யாராக இருந்தாலும் இவைகளை சாப்பிடக்கூடாது என மருத்துவர்களும் ஆலோசனை சொல்லி வருகிறார்கள். பஞ்சு மிட்டாயை தொடர்ந்து இந்த நைட்ரஜன் பிஸ்கட் மற்றும் ட்ரை ஐஸ்ஸும் குழந்தைகளின் உயிரை பறிக்கும் என்பதால் இந்தவகை உணவுகளை சாப்பிடுவதையும் சாப்பிடச் சொல்வதையும் நிறுத்த வேண்டும். நல்ல உணவுதான் ஆரோக்கியமான வாழ்வு தரும். ஆரோக்கியம் தரும் உணவுப் பழக்கங்களையே விரும்புவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

You may also like

Leave a Comment

ten − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi