பென்னாகரம்: போதையில் யானைக்கு கும்பிடு போட்டு ரகளை செய்த, கான்ட்ராக்டருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையோரம் கொம்பன் யானை ஒன்று முகாமிட்டிருந்தது. நேற்று முன்தினம் அவ்வழியாக வந்த பென்னாகரம் எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த கான்ட்ராக்டரும், டிராக்டர் டீலருமான முருகேசன்(45) என்பவர் போதையில் திடீரென தனது வண்டியை நிறுத்தி, யானையின் அருகே சென்று இரண்டு கைகளையும் தூக்கி கூப்பியவாறு யானையிடம் சரண்டர் ஆவது போல போஸ் கொடுத்து சாஷ்டாங்கமாக பெரிய கும்பிடு போட்டார். ஆனால், அந்த யானையோ எதுவும் செய்யாமல், முருகேசன் செய்த சேட்டையை கண்டு சற்று பின்வாங்கியவாறு சாதுவாக நின்றது. இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில், பென்னாகரம் வன சரக அலுவலர் முருகன், முருகேசனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளார்.
Karthik Yash
நெல்லை: பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், அம்பை பகுதியில் வழக்கு விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கில் ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அம்பை, கல்லிடை, விகேபுரம் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது தீவிர குற்ற தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி சங்கர் தலைமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, விகேபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 24 போலீசாரை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் கோடை விடுமுறைக்கு பின் மாணவ, மாணவிகளை பள்ளிகளில் சேர்க்கும் வகையில் போலீசாருக்கு வழங்கப்படும் வழக்கமான பணியிடமாற்றம் தான் எனவும், இதுவரை 360 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில், யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம்-ஒழுங்கு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதுதொடர்பாக 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் என இவ்வழக்கு நீண்டது. கடைசியாக தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா ஆகிய 5 பேர் கொண்ட உச்சநீதிமன்றத்தின் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது.
இதற்கிடையில், 2021-ல் தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்ட திருத்தத்தின்படி, டெல்லி அரசு எந்த முடிவு எடுத்தாலும், துணை நிலை ஆளுநரின் கருத்தை கேட்டறிவது கட்டாயமாக்கப்பட்டது. இதன்பிறகு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும்கூட, துணைநிலை ஆளுநரின் அனுமதியை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதாவது, ‘‘இதர யூனியன் பிரதேசங்களுக்கும், டெல்லிக்கும் வித்தியாசம் இருக்கிறது.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்கவேண்டும். பொது ஒழுங்கு, காவல்துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களை தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். டெல்லி துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும்’’ என நெற்றிப்பொட்டில் நச்சென அடித்தாற்போல் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 160, 356, 357 ஆகிய பிரிவுகளின்கீழ் ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டும்தான் அவரால் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட முடியும்.
டெல்லி விவகாரத்தில், கவர்னர் தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பட தவறிவிட்டார் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மக்களாட்சி தத்துவத்தை ஏற்றிருக்கிற இந்தியாவில், ஆங்கிலேயர் காலத்து நடைமுறையான ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது, மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் தனது அதிகாரத்தைக்கொண்டு, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநிலத்தின் ஆட்சியினை அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் மூலம் கலைத்துவிடலாம் என பூச்சாண்டி காட்டுவது மக்களாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவுப்பாலமாக செயல்பட வேண்டிய ஆளுநர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது மாநில உரிமைகளுக்கும், மக்களாட்சி தத்துவத்துக்கும் ஊறு விளைவிப்பதாகும். உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, டெல்லிக்கு மட்டும் பொருந்தாது. நாடு முழுவதும் உள்ள ஆளுநர்கள் இந்த அறிவுரையை பின்பற்றினால், ஜனநாயக மாண்பு காப்பாற்றப்படும்.
பண இரட்டிப்பு ஆசைகாட்டி சென்னை மாணவியின் தற்கொலைக்கு காரணமான மேற்கு வங்க கல்லூரி மாணவர்கள் 3 பேர் அதிரடி கைது: த்ரில்லர் கிரைம் சினிமா பாணியில் சென்னை போலீசார் அசத்தல்
சென்னை: முத்தியால்பேட்டை பகுதியில் வசித்த கல்லூரி மாணவி இரட்டிப்பு பண ஆசையில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், திடீர் திருப்பமாக இன்ஸ்டாகிராம் மூலம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்க கல்லூரி மாணவர்கள் 3 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர். சினிமாவில் வரும் த்ரில்லர் கதை போல, போலீசார் விசாரணையை தொடங்கி குற்றவாளிகளை கைது செய்தது வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை, ஏழுகிணறு போர்ச்சுக்கீசியர் சர்ச் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி(20). அண்ணா நகரிலுள்ள மகளிர் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி அதிகாலை, தனது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாணவி மகாலட்சுமியின் தாய் சாந்தி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், மாணவி அடிக்கடி ஆன்லைனில் விளையாடுவார். பணத்தையும் இழந்துள்ளார். இதனால்தான் அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தற்கொலை செய்து கொண்டது கல்லூரி மாணவி என்பதாலும், ஆன்லைனில் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதாலும், அவரது மரணத்தை சாதாரணமாக எடுக்க வேண்டாம். இந்த மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை ளின் கண்டுபிடித்து கைது செய்யுங்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், இணை ஆணையர் ரம்யா பாரதியை கேட்டுக் கொண்டார். இதனால் இணை கமிஷனர் ரம்யா பாரதி தலைமையில், துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான், உதவி கமிஷனர் வீரக்குமார், இன்ஸ்பெக்டர் சபியுல்லா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இறந்துபோன மாணவி சமுக வளைத்தளமான இன்ஸ்டாகிராமில் மகா என்ற பெயரில் கணக்கை உபயோகித்து வந்துள்ளதை கண்டுபிடித்தனர். மேலும், மகாலஷ்மியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ‘ஐ ஆம் அட்விகா கபூர்’ என்ற கணக்கில் இருந்து செய்தி அனுப்பிய நபர்கள், தாங்கள் வியாபாரிகள் என்றும், கிரிப்டோவில் ரூ.750 முதலீடு செய்தால், ரூ.23,250 திரும்பக் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை மகாலட்சுமிக்கு செய்தியாக அனுப்பியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பி அவர்களுடன் மகாலட்சுமி தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இதையடுத்து, அந்த நபர்கள் கொடுத்த கூகுள் பே கணக்கிற்கு ரூ.37,430 அனுப்பியுள்ளார். அப்போது அவர்கள் இரட்டிப்பாக பணம் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் சொன்னபடி பணத்தை அனுப்பாததால் தான் அனுப்பிய பணத்தை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று மகாலட்சுமி கூறியுள்ளார். ஆனால் குற்றவாளிகள் பணத்தை திருப்பி அனுப்பாமல், மேலும் பணம் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து மகாலட்சுமி கடந்த 2ம் தேதி அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார், மாணவியின் இன்ஸ்டாகிராம் சாட்டிங்குகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சினிமா பாணி த்ரில்லர் கிரைம் போல விசாரணையை தொடங்கினர். போலீசார் கூகுள்பே எண்ணை கொண்டும், இன்ஸ்டாகிராம் கணக்கை கொண்டும் தீவிர விசாரணை செய்தனர். அதில், குற்றவாளிகள் கொல்கத்தாவில் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்தபோது, அது வேறொரு நபர் பெயரில் இருப்பதும், அவர்கள் கொல்கத்தாவில் இருந்து இயங்கி வருவதும் தெரியவந்தது. அதன்பேரில் மோசடியில் 2க்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இதனால், தனிப்படையினர் கொல்கத்தா சென்று அங்கு முகாமிட்டு விசாரித்தனர். இன்ஸ்டாகிராம் மோசடிக்கு இங்குள்ள கிதார்பூர், ஏக்பால்பூர் ஆகிய இடங்கள் பெயர் பெற்றது என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்போன் எண்ணின் முகவரி, வங்கி கணக்கு வைத்திருந்த வங்கிகள், பண பரிவர்த்தனைகள் நடந்த விவரங்கள், பணம் எடுத்த ஏடிஎம் மையங்கள் சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் கொல்கத்தாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அமனுல்லா கான் (20), முகமது பைசல் (21), முகமது ஆசிப் இக்பால்(22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சில போன்கள், லேப்டாப் மற்றும் ரூ.10,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் முகமது பைசல், 2022 டிசம்பரில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். பின்னர் மற்ற 2 பேருடன் இணைந்து தங்களது ஐபோன்களில் இக் கணக்கை உபயோகித்து இன்ஸ்டாகிராம் மூலம் பல நபர்களை தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பணப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
இந்த பண பரிமாற்றத்திற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த ஜாஹுனுதீன் என்பவருடைய வங்கி கணக்கை பெற்று, அதன்மூலம், அப்பாவி நபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்து, மூவரும் சமமாக பிரித்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் கடந்த 4 மாதங்களில் மட்டும் பல நபர்களை ஏமாற்றி ரூ.15 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரையும், மேற்கு வங்க மாநிலம், அலிப்பூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளுடன் நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி பெற்று 3 பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகள் 3 பேரும் நேற்று 16வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
* போலீஸ் கமிஷனர் அறிவுரை
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறும்போது, ‘‘கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம், குறைந்த விலையில் விலையுயர்ந்த பொருட்கள் என ஆசை வார்த்தைகளை அள்ளி வழங்கும் விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை கண்டு ஏமாற வேண்டாம். மேலும், இது போன்ற மோசடி நபர்கள் குறித்து தகவலறிந்தால், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை அல்லது சைபர் கிரைம் பிரிவிற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக, முத்துவும் 30 திருடர்களும் என்ற விழிப்புணர்வு இ-புத்தகம் வெளியிட்டு உள்ளது. இணையதளம் மற்றும் சென்னை பெருநகர காவல் சமூக வலைதளங்களில், சென்னை பெருநகர காவல்துறையினர் பதிவேற்றம் செய்துள்ள க்யூ ஆர் கோட் மூலம் இப்புத்தகத்தை படித்து கணினி வழி குற்றங்கள் குறித்தும் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்படலாம் எனவும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் படித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’’ என்றார்.
கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைந்தது சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு
சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. 10ம் வகுப்பு 93.12%, 12ம் வகுப்பு 87.33% மொத்த தேர்ச்சி வீதம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, இரண்டு வகுப்புகளிலும் தேர்ச்சி வீதம் குறைந்துள்ளன. மாணவர்களை விட மாணவியர்கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மண்டல அளவிலான தேர்ச்சியில் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், சென்னை 3ம் இடத்தை பிடித்துள்ளது.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நாடு முழுவதும் உள்ள 16728 பள்ளிகளில் 12ம் வகுப்பில் படித்த மாணவ மாணவியருக்கு, 2023 பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடந்தன. இதற்காக நாடு முழுவதும் 6759 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வில் நாடு முழுவதும் 16 லட்சத்து 80 ஆயிரத்து 256 மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 174 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 87.33 சதவீதம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சியில் 5.38 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மொத்த தேர்ச்சி 92.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் படித்தவர்கள் 19420 பேர் எழுதினர். அவர்களில் 17981 பேர் தேர்்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 92.59%. நாடு முழுவதும் தேர்வு எழுதியுள்ளவர்களை பொருத்தவரையில் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 90.68%, மாணவர்கள் 84.67% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவியர் 6.01% கூடுலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி வரை நடந்தது. நாடு முழுவதும் உள்ள 24480 பள்ளிகளில் படித்த 21 லட்சத்து 84 ஆயிரத்து 117 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களுக்காக 7241 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வில் 21 லட்சத்து 65 ஆயிரத்து 805 மாணவ மாணவியர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில் 20 லட்சத்து 16 ஆயிரத்து 779 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 93.12% கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.28 % தேர்ச்சி பத்தாம் வகுப்பில் குறைந்துள்ளது. வெளிநாடுகளில் இயங்கும் பள்ளிகள் மூலம் 25391 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 25186 பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 24667 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 97.94 சதவீதம். பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்றவர்களில் அனைத்து பாடங்களிலும் மாணவியர் 94.25 சதவீதமும், மாணவர்கள் 92.27 சதவீதமும், மாற்றுப்பாலினத்தவர் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறப்பு குழந்தைகள் பிரிவில் 7286 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 7154 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 6627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 92.63%. தேர்வில் அனைத்து பாடங்களிலும் 90 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 1 லட்சத்து 95 ஆயிரத்து 799 பேர்(9.04%). அனைத்து பாடங்களிலும் 95 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றவர்கள் 44297 பேர்(2.05%). அதேபோல சிறப்பு குழந்தைகளில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 278, 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 58 பேர். பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்றவர்களில் 134774 பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
மண்டல வாரியாக
தேர்ச்சி வீதம்
மண்டலம் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு
திருவனந்தபுரம் 99.91 99.91
பெங்களூர் 99.18 98.64
சென்னை 99.14 97.40
அஜ்மீர் 97.27 89.27
புனே 96.92 87.28
பாட்னா 94.57 85.47
சண்டிகர் 93.84 91.84
புவனேஸ்வர் 93.64 83.89
பிரயாக்ராஜ் 92.55 78.05
நொய்டா 92.50 80.36
பஞ்ச்குலா 92.33 86.93
போபால் 91.24 83.54
மேற்குடெல்லி 90.67 93.24
டேராடூன் 90.61 80.26
கிழக்கு டெல்லி 88.30 91.50
கவுஹாத்தி 76.90 83.73
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார்? இன்று காலை 10 மணிக்கு முடிவு தெரியும்: தொங்கு சட்டசபை அமைந்தால் குமாரசாமி ஆதரவை பெற காங்., பாஜ முயற்சி
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. காலை 10 மணி அளவில் முன்னணி நிலவரம் வெளியானதும் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற விவரம் தெரியவரும். அதே நேரத்தில் கருத்து கணிப்புகள்படி யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில், மஜத தலைவர்கள் தேவகவுடா மற்றும் குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த தேர்தலில் ஆளும் பாஜ 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223, மஜத 207 உட்பட மொத்தமாக 2613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமைச்சர் சோமண்ணா களமிறக்கப்பட்டுள்ளார். மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். டி.கே.சிவகுமாரை எதிர்த்து அமைச்சர் ஆர்.அசோக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், பாஜ, மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 34 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 24 மணி நேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னணி நிலவரம் வெளியானதும் காலை 10 மணி அளவில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரிந்துவிடும்.
இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் அதாவது 10 கருத்துக் கணிப்புகளில் 7 கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும், பாஜ ஆட்சியை இழக்கும் என்று தெரிவித்துள்ளன. அதேநேரம் முழு பெரும்பான்மை எண்ணிக்கையில் காங்கிரசுக்கு சீட்கள் கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், தொங்கு சட்டசபை அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் மஜத கட்சி, யாருக்கு ஆதரவு அளிக்கவுள்ளதோ? அந்த கட்சி தான் ஆட்சியமைக்க முடியும் என்று நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த கட்சிக்கு மவுசு அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் – பாஜ கட்சிகளின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் மஜத சட்டமன்றக் கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி, திடீரென சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘கருத்துக்கணிப்புகளை பார்க்கும் போது, புதிய அரசு அமைவதில் மஜத-வின் பங்கு அதிகமாக இருக்கவாய்ப்புள்ளது. எங்களது கட்சி 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எனது நிபந்தனைகளை எந்தக் கட்சி நிறைவேற்றுகிறதோ அதைப் பொறுத்து தான் பாஜ அல்லது காங்கிரசுடன் கூட்டணி அமைப்பேன்’ என்றார். கடந்த காலங்களில் அதாவது 2004, 2008, 2018 ஆகிய ஆண்டுகளில் கூட்டணி அரசு அமைந்தும், அந்த அரசுகள் கவிழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பெங்களூருவில் மல்லிகார்ஜூன்கார்கே வீட்டில் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், டிகே சிவகுமார் தலைமையில் ஆலோசனை நடந்தது. அது போல் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் வீட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
மீண்டும் குதிரை பேரம்
கர்நாடக சட்ட சபை தேர்தலில் பாஜ, காங்., கட்சி தலைவர்கள் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என அதிரடியாக கூறி வருகின்றனர். மஜத தலைவர் சிஎம் இப்ராஹிம் இந்த தேர்தலில் தாங்கள் தான் கிங் மேக்கர் என கூறியுள்ளார். எனவே, கர்நாடக சட்ட சபை தேர்தலில் ஒருவேளை எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் குதிரை பேரத்திற்கும் பாஜ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மஜத வேட்பாளர்கள் அனைவருக்கும் முன்னாள் முதல்வர் குமாரசாமி ரகசிய உத்தரவிட்டுள்ளார் எனவும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தனியாக ஒரு ரிசார்ட்டில் அவர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார். அது போல் காங்கிரஸ் மற்றும் பாஜவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* மொத்தம் 224 தொகுதிகளில் 113 தொகுதிகளை வெல்லும் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.
* கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ 104, காங்கிரஸ் 78, மதஜ 37 இடங்களை கைப்பற்றின.
* பெரும்பான்மை பலம் கிடைக்காததால் காங்கிரஸ், மஜத இணைந்து ஆட்சி அமைத்தன. பின்னர் சில எம்எல்ஏக்கள் கட்சி தாவியதால், 2019ல் பாஜ 120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியது.
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் ேகாயில் சித்திரை பிரமோற்சவ திருவிழாவில் தேரோட்டம் திரளானோர் பங்கேற்பு
நெல்லை, மே 12: நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ திருவிழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருத்தலங்களில் ஒன்றுமான நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான சித்திரை பிரமோற்சவ திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் தேவி, பூதேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் கோலாகலமாக நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு திருமஞ்சனம், மலர் அலங்காரத்தை தொடர்ந்து தோளுக்கினியான் பல்லக்கு மூலம் திருத்தேரில் தாயார்களுடன் சுவாமி எழுந்தருளியதும் தேரோட்டம் துவங்கியது. இதில் திரளாகப் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
பாளை. பகுதிகளில் நாளை முதல் 2 நாட்கள் குடிநீர் சப்ளை ‘கட்’
நெல்லை, மே 12: மணப்படைவீடு நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக பாளை. பகுதிகளில் நாளை (13ம் தேதி) முதல் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி, பாளை. வார்டு அலுவலகத்திற்கு உட்பட்ட மணப்படைவீடு புதிய தலைமை நீரேற்று நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வால்வுகள் பொருத்தும் பணி மற்றும் இதர பராமரிப்பு பணி நாளை (13ம் தேதி) நடக்கிறது. இதன் காரணமாக மணப்படைவீடு நீரேற்று நிலையத்தை இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே நாளை (13ம் தேதி), நாளை மறுதினம் (14ம் தேதி) ஆகிய இரு நாட்கள் பாளை. மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்கள் 6 முதல் 9 மற்றும் வார்டு எண்கள் 32 முதல் 36 மற்றும் 39வது வார்டு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நெல்லை, மே 12: மேலப்பாளையம் பீடி காலனியை சேர்ந்த முருகனின் மகள் சண்முககனி (18). பிளஸ் 2 வரை படித்துள்ள இவர் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர், மாலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர், தோழிகள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தும் அவரைப் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. வழக்குப் பதிந்த மேலப்பாளையம் போலீசார், மாயமான சண்முககனியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிப்பறைகள் சீரமைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
நெல்லை, மே 12: பாளை வேய்ந்தான்குளம் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து காணப்பட்ட இலவச கழிப்பறைகள் சீரமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். பாளை வேய்ந்தான்குளம் பகுதியில் செயல்படும் பாரதரத்னா எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளது. இங்கிருந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு மாநகர பஸ்கள் தினசரி இயக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், நெல்லை அரசு மருத்துவமனை, பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் வெளியூர்களுக்கு பயணம் செய்வோர் என பல்வேறு காரணங்களுக்காக தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பஸ்நிலையத்தில் ெபாதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு நடைமேடையிலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே நவீன கட்டண கழிப்பறைகள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமேயுள்ள ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே இலவச கழிப்பறைகளும் முறையான பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கு வரும் பயணிகள் உள்ளிட்டோர் இலவச கழிப்பறைகளுக்கு செல்வதை தவிர்த்து அங்குள்ள நவீன கட்டண கழிப்பறைகளுக்கு செல்லும் நிலை உருவானது.
தூத்துக்குடி, மே 12: தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் இன்றும் (12ம் தேதி), நாளையும் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடக்கிறது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக விழா நடைபெறும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் நேற்று மாலை 6 மணி முதல் 14ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவுக்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இத்தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி எஸ்பியை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இந்த தடை உத்தரவு, திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது.