நெல்லை, மே 12: நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ திருவிழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருத்தலங்களில் ஒன்றுமான நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான சித்திரை பிரமோற்சவ திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் தேவி, பூதேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் கோலாகலமாக நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு திருமஞ்சனம், மலர் அலங்காரத்தை தொடர்ந்து தோளுக்கினியான் பல்லக்கு மூலம் திருத்தேரில் தாயார்களுடன் சுவாமி எழுந்தருளியதும் தேரோட்டம் துவங்கியது. இதில் திரளாகப் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
பாளை. பகுதிகளில் நாளை முதல் 2 நாட்கள் குடிநீர் சப்ளை ‘கட்’
நெல்லை, மே 12: மணப்படைவீடு நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக பாளை. பகுதிகளில் நாளை (13ம் தேதி) முதல் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி, பாளை. வார்டு அலுவலகத்திற்கு உட்பட்ட மணப்படைவீடு புதிய தலைமை நீரேற்று நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வால்வுகள் பொருத்தும் பணி மற்றும் இதர பராமரிப்பு பணி நாளை (13ம் தேதி) நடக்கிறது. இதன் காரணமாக மணப்படைவீடு நீரேற்று நிலையத்தை இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே நாளை (13ம் தேதி), நாளை மறுதினம் (14ம் தேதி) ஆகிய இரு நாட்கள் பாளை. மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்கள் 6 முதல் 9 மற்றும் வார்டு எண்கள் 32 முதல் 36 மற்றும் 39வது வார்டு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.