சென்னை: முத்தியால்பேட்டை பகுதியில் வசித்த கல்லூரி மாணவி இரட்டிப்பு பண ஆசையில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், திடீர் திருப்பமாக இன்ஸ்டாகிராம் மூலம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்க கல்லூரி மாணவர்கள் 3 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர். சினிமாவில் வரும் த்ரில்லர் கதை போல, போலீசார் விசாரணையை தொடங்கி குற்றவாளிகளை கைது செய்தது வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை, ஏழுகிணறு போர்ச்சுக்கீசியர் சர்ச் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி(20). அண்ணா நகரிலுள்ள மகளிர் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி அதிகாலை, தனது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாணவி மகாலட்சுமியின் தாய் சாந்தி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், மாணவி அடிக்கடி ஆன்லைனில் விளையாடுவார். பணத்தையும் இழந்துள்ளார். இதனால்தான் அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தற்கொலை செய்து கொண்டது கல்லூரி மாணவி என்பதாலும், ஆன்லைனில் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதாலும், அவரது மரணத்தை சாதாரணமாக எடுக்க வேண்டாம். இந்த மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை ளின் கண்டுபிடித்து கைது செய்யுங்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், இணை ஆணையர் ரம்யா பாரதியை கேட்டுக் கொண்டார். இதனால் இணை கமிஷனர் ரம்யா பாரதி தலைமையில், துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான், உதவி கமிஷனர் வீரக்குமார், இன்ஸ்பெக்டர் சபியுல்லா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இறந்துபோன மாணவி சமுக வளைத்தளமான இன்ஸ்டாகிராமில் மகா என்ற பெயரில் கணக்கை உபயோகித்து வந்துள்ளதை கண்டுபிடித்தனர். மேலும், மகாலஷ்மியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ‘ஐ ஆம் அட்விகா கபூர்’ என்ற கணக்கில் இருந்து செய்தி அனுப்பிய நபர்கள், தாங்கள் வியாபாரிகள் என்றும், கிரிப்டோவில் ரூ.750 முதலீடு செய்தால், ரூ.23,250 திரும்பக் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை மகாலட்சுமிக்கு செய்தியாக அனுப்பியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பி அவர்களுடன் மகாலட்சுமி தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இதையடுத்து, அந்த நபர்கள் கொடுத்த கூகுள் பே கணக்கிற்கு ரூ.37,430 அனுப்பியுள்ளார். அப்போது அவர்கள் இரட்டிப்பாக பணம் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் சொன்னபடி பணத்தை அனுப்பாததால் தான் அனுப்பிய பணத்தை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று மகாலட்சுமி கூறியுள்ளார். ஆனால் குற்றவாளிகள் பணத்தை திருப்பி அனுப்பாமல், மேலும் பணம் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து மகாலட்சுமி கடந்த 2ம் தேதி அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார், மாணவியின் இன்ஸ்டாகிராம் சாட்டிங்குகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சினிமா பாணி த்ரில்லர் கிரைம் போல விசாரணையை தொடங்கினர். போலீசார் கூகுள்பே எண்ணை கொண்டும், இன்ஸ்டாகிராம் கணக்கை கொண்டும் தீவிர விசாரணை செய்தனர். அதில், குற்றவாளிகள் கொல்கத்தாவில் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்தபோது, அது வேறொரு நபர் பெயரில் இருப்பதும், அவர்கள் கொல்கத்தாவில் இருந்து இயங்கி வருவதும் தெரியவந்தது. அதன்பேரில் மோசடியில் 2க்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இதனால், தனிப்படையினர் கொல்கத்தா சென்று அங்கு முகாமிட்டு விசாரித்தனர். இன்ஸ்டாகிராம் மோசடிக்கு இங்குள்ள கிதார்பூர், ஏக்பால்பூர் ஆகிய இடங்கள் பெயர் பெற்றது என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்போன் எண்ணின் முகவரி, வங்கி கணக்கு வைத்திருந்த வங்கிகள், பண பரிவர்த்தனைகள் நடந்த விவரங்கள், பணம் எடுத்த ஏடிஎம் மையங்கள் சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் கொல்கத்தாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அமனுல்லா கான் (20), முகமது பைசல் (21), முகமது ஆசிப் இக்பால்(22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சில போன்கள், லேப்டாப் மற்றும் ரூ.10,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் முகமது பைசல், 2022 டிசம்பரில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். பின்னர் மற்ற 2 பேருடன் இணைந்து தங்களது ஐபோன்களில் இக் கணக்கை உபயோகித்து இன்ஸ்டாகிராம் மூலம் பல நபர்களை தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பணப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
இந்த பண பரிமாற்றத்திற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த ஜாஹுனுதீன் என்பவருடைய வங்கி கணக்கை பெற்று, அதன்மூலம், அப்பாவி நபர்களிடம் பணம் பெற்று மோசடி செய்து, மூவரும் சமமாக பிரித்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் கடந்த 4 மாதங்களில் மட்டும் பல நபர்களை ஏமாற்றி ரூ.15 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரையும், மேற்கு வங்க மாநிலம், அலிப்பூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளுடன் நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி பெற்று 3 பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகள் 3 பேரும் நேற்று 16வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
* போலீஸ் கமிஷனர் அறிவுரை
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறும்போது, ‘‘கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம், குறைந்த விலையில் விலையுயர்ந்த பொருட்கள் என ஆசை வார்த்தைகளை அள்ளி வழங்கும் விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை கண்டு ஏமாற வேண்டாம். மேலும், இது போன்ற மோசடி நபர்கள் குறித்து தகவலறிந்தால், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை அல்லது சைபர் கிரைம் பிரிவிற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக, முத்துவும் 30 திருடர்களும் என்ற விழிப்புணர்வு இ-புத்தகம் வெளியிட்டு உள்ளது. இணையதளம் மற்றும் சென்னை பெருநகர காவல் சமூக வலைதளங்களில், சென்னை பெருநகர காவல்துறையினர் பதிவேற்றம் செய்துள்ள க்யூ ஆர் கோட் மூலம் இப்புத்தகத்தை படித்து கணினி வழி குற்றங்கள் குறித்தும் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்படலாம் எனவும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் படித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’’ என்றார்.