சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் புதிதாக 9 லட்சத்து 91 ஆயிரம் சேமிப்பு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் பதிவாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட இணை பதிவாளர்கள் ஆய்வு கூட்டம் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான கூட்டுறவு வங்கிகளில் புதிதாக சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்ட விவரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன்; கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் புதிதாக 9 லட்சத்து 91 ஆயிரம் சேமிப்பு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் கூட்டுறவுத்துறை முக்கிய பங்காற்றுவதாகவும் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக முதலமைச்சர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்; கடந்த ஆண்டு ரூ.12,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.13,500 கோடி பயிர் கடன் வழங்கியதாகவும், நடப்பாண்டில் ரூ.14,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.