விருதுநகர்: விருதுநகர், பாரதி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் சந்திரன் (52). எல்ஐசி முகவர். இவர் நேற்று பகல் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். பிற்பகல் 3 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த சந்திரன் வீட்டின் கதவை தட்டினார். அப்போது உள்ளே இருந்த நபர், ‘நீங்கள் போய்விட்டு 10 நிமிடம் கழித்து வாருங்கள். எல்லாத்தையும் எடுத்திட்டு வர்றேன்…’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சந்திரன், ‘எனது வீட்டிற்குள்ளேயே புகுந்து திருடுகிறாயா?’ என சத்தமிட்டவாறு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். வீட்டு வாசலை மறித்து நின்ற மக்கள் கதவை திறக்குமாறு திருடனை எச்சரித்தனர். ஆனால் திருடனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது உள்ளேயிருந்த திருடன் வீட்டின் மாடி வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. சந்திரன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 சவரன் செயின் திருடு போயிருந்தது.