சென்னை: அர்ஜெண்டினாவில் உள்ள அக்கோன்காகுவா சிகரத்தில் ஏறி சாதனை படைத்துவிருதுநகரை சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள எல்ப்ரஸ், ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கிளிமஞ்சாரோ ஆகிய உலக புகழ்பெற்ற சிகரங்களில் ஏறி ஏற்கனவே அவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். சாதனை வேட்கையில் அடுத்த கட்டமாக அக்கோன்காகுவா சிகரத்தில் ஏறிய முத்தமிழ் செல்வி இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் தமிழ்பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில், சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உறவினர்கள், மாணவர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலத்தகாற்று மற்றும் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிர் வாட்டியபோதும் 3 நாட்கள் தேநீர் மட்டுமே அருந்தியதாக கூறிய முத்தமிழ் செல்வி அக்கோன்காகுவா சிகரத்தில் ஏறி சாதனையை நிகழ்த்தியதாக தெரிவித்தார். ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி சாதனை நிகழ்த்துவதே தமது லட்சியம் என்று அவர் கூறினார்.