புதுடெல்லி: அக்னிவீரர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் அக்னிபாத் திட்டம்.ஓய்வூதியம் உட்பட பாதுகாப்பு துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் அக்னி வீரர்களுக்கு ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என சமீபத்தில் அரசு அறிவித்தது. முதல் கட்ட பேட்ச் வீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 வருடங்கள் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரயில்வேயின் 1ம் நிலை பணிகளில் 10 சதவீதம், 2 ம் நிலை பணிகளில் 5 சதவீதமும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் வயது வரம்பில் 5 வருடங்கள் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.