அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சோமநாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சந்திராயன் 4 இரண்டு ராக்கெட்டுகளாக விண்ணில் ஏவப்படுவது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இஸ்ரோ ஏவுதளத்திலிருந்து தனியார் ராக்கெட்டுகள் ஏவ அனுமதி அளிக்கப்படும். குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள ஏவுதளத்தில் இருந்து, ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் பணிகள் முடிவுக்கு வர சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.
முன்னதாக குலசேகரன்பட்டினத்தில் இருந்து சிறிய ரக ராக்கெட்டுகள் ஏவப்படலாம். இந்த ஏவுதளம் அருகே கன்னியாகுமரி மற்றும் இலங்கை உள்ளதால், இது அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியாக இருக்கிறது. இங்கிருந்து பிஎஸ்எல்வி வகையை சேர்ந்த 500 கிலோ எடையுள்ள ராக்கெட்டுகள் ஏவப்படும். இஸ்ரோவில் 20 சதவீதம் பெண் விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். இவ்வாறு கூறினார்.