Thursday, May 2, 2024
Home » காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி: நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சோகம்

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி: நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சோகம்

by Karthik Yash
Published: Last Updated on

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, நண்பனின் பிறந்த நாளை கொண்டாட வந்த இடத்தில், கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்த அரசு கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன்(20), கொங்கணாபுரம் அடுத்த எருமைப்பட்டி செல்வம் மகன் முத்துசாமி (19), கன்னந்தேரியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன்(20), எட்டிகுட்டைமேடு பகுதியை சேர்ந்த சித்தன் மகன் பாண்டியராஜன் (20). இவர்கள், இடைப்பாடி அருகே கோணமேடு அரசு கலைக்கல்லூரியில் பிஏ., தமிழ் 3ம் ஆண்டு படித்து வந்தனர். இவர்களது நண்பரான வனவாசி ஆணைப்பள்ளத்தை சேர்ந்த சரவணனுக்கு, நேற்று பிறந்த நாள். இதை கொண்டாடுவதற்காக மணிகண்டன் உள்ளிட்டோர், உடன் படிக்கும் சக மாணவர்கள் 5 பேருடன் இடைப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கேக் வெட்டியும், உணவு சாப்பிட்டும் மகிழ்ந்தனர்.

பின்னர், காவிரி ஆற்றில் இறங்கினர். தண்ணீர் குறைவாகவே சென்றதால், அனைவரும் ஆற்றின் நடுவே ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர். திடீரென முத்துசாமி, மணிகண்டன், பாண்டியராஜன், மற்றொரு மணிகண்டன் ஆகிய 4 பேரும் தண்ணீரில் மூழ்கினர். மற்ற நண்பர்களால் அவர்களை மீட்க முடியவில்லை. மறுகரையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் வந்து ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து இடைப்பாடி மற்றும் பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், மீனவர்களுடன் சேர்ந்து ஆற்றில் இறங்கி 4 பேரின் சடலங்களையும் மீட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. நண்பரின் பிறந்த நாள் கொண்டாட வந்த இடத்தில், காவிரியில் மூழ்கி 4 மாணவர்கள் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி முதல்வர் உத்தரவு
    முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, கல்வடங்கம் கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில்குளிக்க சென்ற தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த வேதனையான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ என கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

twenty − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi