Sunday, May 19, 2024
Home » கே.வி.குப்பம் அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கே.வி.குப்பம் அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

by kannappan
Published: Last Updated on

*பெண் உட்பட 2 பேர் கைது

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமி குறித்தும் கைது செய்யப்பட்ட பெண் உட்பட இருவரையும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் செதுவாலையிலிருந்து கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் வழியாக இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக நேற்று வட்ட வழங்கல் அலுவலர் ஜனனிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் ஜனனி தலைமையில் ஆர்.ஐ இளங்கோ, விஏஓ சேகுவேரா உள்ளிட்ட அதிகாரிகள் விரிஞ்சிபுரம் கூட்ரோட்டில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தினை மடக்கி பிடித்தனர். அதிகாரிகளை கண்ட மர்ம ஆசாமி தப்பி ஓடினார். மேலும் இருச்சக்கர வாகனத்திலிருந்த 161 கிலோ ரேஷன் அரிசியோடு அந்த இருசக்கர வாகனத்தினையும் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து வடுகன்தாங்கல்- கீழ்முட்டுக்கூர் சாலையில் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்திக்கு ஒரு டன் ரேஷன்‌அரிசி, செதுவாலையிலிருந்து வடுகன்தாங்கல் வழியாக கடத்துவதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1 டன் ரேஷன்‌அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கடத்திய பெண் உட்பட 2 பேரை கைது செய்து மற்றும் 1 டன் அரிசி பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 1 டன், 161 கிலோ அரிசி மூட்டைகளை திருவலம் அரிசி ஆலையிலும், அதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், லோடு வேன், கடத்திய 2 பேரையும் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் லோடு வேனில் கடத்தியவர்கள் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விக்னேஷ் (24), சுப்ரமணி மனைவி மகேஸ்வரி (50) என்று விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக இருச்சக்கர வாகனத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

10 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi