திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத் (54). அங்குள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 12 வயதான ஒரு சிறுமியை மிட்டாய் தருவதாக கூறி பலாத்காரம் செய்து உள்ளார். இதே போல பலமுறை சிறுமியை அப்துல் ரஷீத் பலாத்காரம் செய்தார். நாளுக்கு நாள் அப்துல் ரஷீதின் தொல்லையை பொறுக்க முடியாமல் சிறுமி தன்னுடைய தோழியிடம் விவரத்தை கூறியுள்ளார். இந்த விவரம் சிறுமியின் ஆசிரியைக்கு தெரியவந்தது. இது குறித்து மஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அப்துல் ரஷீதை கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தில் 6 பிரிவுகளிலும், இந்திய தண்டனை சட்டத்தில் ஒரு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மஞ்சேரி அதிவிரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஷ்மி, தொழிலாளி அப்துல் ரஷீதுக்கு 109 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளதால் அவருக்கு அதிகபட்சமாக 30 வருடம் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.