திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் நேற்று தொடங்கியது. பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்தார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று முதல் மாத பூஜைகள் தொடங்கின.
அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. வரும் 22ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. நேற்று சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. கன மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.