தா.பழூர், ஜூலை 13: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி (65) விவசாயி. இவர் கடந்த சில வருடங்களாக ரத்த கொதிப்பு மற்றும் பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இதனால் பல மருத்துவமனைகளில் மருந்து மாத்திரை சாப்பிட்டும் நோய் குணமாகாததால் வீட்டில் யாரும் இல்லாத பொழுது வயலுக்கு தெளிக்க பயன்படும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் பழனியாண்டியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் பழனியாண்டியின் மகன் ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.