வலங்கைமான், ஏப்.24: திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெறுவதையொட்டி முக்கனிகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக நடந்த முகாம் இன்று நிறைவடைந்தது.இதையொட்டி பணியை சிறப்பாக மேற்கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;
ஆசிரியர்கள் கடந்த 15 தினங்களாக தேர்வு அறைக் கண்காணிப்பாளர் பணி, மக்களவைத் தேர்தல் பணி, விடைத்தாள் திருத்தும் பணி ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த மூன்று முக்கியமான பணிகளையும் சிறப்பாக செய்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு முக்கனிகள் வழங்கி பாராட்டு தெரிவித்து இருக்கிறேன்.
இனிப்பும் காரமும் வழங்குவதை விட முக்கனிகள் வழங்குவது ஆசிரியர்களின் இதயத்தை தொடும். அது மட்டுமல்லாமல் சித்திரை பௌர்ணமி அன்று முக்கனி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையிலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது என்றார். ஆசிரியர்கள் ரேணுகா சூரியகுமார், முத்துவேல் வள்ளி மணவாளன், செந்தில்நாதன் உட்பட பலர் உடன் இருந்தனர். 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முக்கனிகள் வழங்கப்பட்டன.