திருவாரூர், ஏப்.24: திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாள் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கையில் ஸ்ரீ அபிஷேகவல்லி சமேத ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோயில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலானது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவானது கடந்த 15ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி தினந்தோறும் காலையில் பெருமாள் திரு பல்லக்கில் வீதியுலாவும் இரவு வாகன புறப்பாடும் நடைபெற்று வரும் நிலையில், 9ம் நாள் விழாவாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 7.15 மணியளவில் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் தேரில் எழுந்தருளிய நிலையில் பின்னர் 8.45 மணியளவில் தேர் வடம்பிடித்து துவங்கப்பட்டது. பின்னர் தேரானது நான்கு வீதிகளையும் சுற்றி வந்து மாலையில் நிலை அடியில் நிறுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பக்தவச்சல பெருமாள் பக்தர் குழுவினர் மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.