திருப்பூர், மே. 1: திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டல அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகரில் அங்கன்வாடி மையத்துக்கு அருகில் உள்ள ஆழ்துளை மோட்டார் அடிக்கடி பழுதாகி விடுவதால், இப்பகுதியில் உள்ள சுமார் 17 தெருக்குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.
இந்த ஆழ்துளை கிணற்று நீரை மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் நிலையில், 10 நாட்களுக்கு ஒரு முறை பழுதாகி, மீண்டும் சரிசெய்து வரும் வரை கோடையின் வாட்டியெடுக்கும் வெப்பத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். எனவே, மின்மோட்டார் அடிக்கடி பழுதாகாமல் இருக்க, தரமான உதிரி பாகங்களைக் கொண்டு சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்நிழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வேலம்பாளையம் நகர செயலாளர் நந்தகோபால், நகர குழு உறுப்பினர் சுகுமார், கிளை செயலாளர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.