மூணாறு, மே 1: கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ள வெள்ளத்தூவல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆணைசால் பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரிசார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள ஓடைகளில் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும்,அப்பகுதி மக்கள் குடி தண்ணீர் மற்றும் இதர தேவைகளுக்காக பயன்படுத்தும் முதிரப்புழை ஆற்றில் கலப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுகாதார துறையினர் மற்றும் ஊராட்சிக்கு தகவல் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் நடத்திய ஆய்வில் கழிவு நீர் ஓடை மற்றும் ஆற்றில் கலப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதியில் இயங்கிவரும் இரண்டு ரிசார்டுகளை அடைக்கும்படி தேவிகுளம் சப்-கலெக்டர் ஜெயகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தேவிகுளம் சப்-கலெக்டர் கூறுகையில், ஆனைச்சால் ஈட்டி சிட்டி பகுதியில் இயங்கிவரும் இரண்டு ரிசார்டுகளில் போதிய கழிவுநீரை சேமித்து வைக்க வசதிகள் இல்லாததால், ஆங்காங்கே அமைக்கப்பட்ட பள்ளங்களில் கழிவு நீர் சேகரித்து வெளியேறி வருவதாகவும், இதனால், இரண்டு தங்கும் விடுதிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேவிகுளம் சப்-கலெக்டர் தெரிவித்தார்.