மயிலாடுதுறை, மார்ச் 23: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அஜித்குமார் கடந்த 20ம்தேதி இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உடன் சென்ற உறவினர் சரவணன் வெட்டுக் காயத்துடன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அஜித்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் கலைஞர் நகர் பகுதி பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அஜித்குமார் உடலை பெறாமல் 20ம் தேதி இரவு முதல் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கற்களால் கடைகளை சேதப்படுத்தியதால் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டது.
பழைய பேருந்து நிலையத்துக்குள் பேருந்து வருவது தடை செய்யப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் நேற்று முன்தினம் ஒருநாள் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட 18 மணிநேரத்தில் 7 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். 2 ஆண்டுகளுக்கு முன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வன்னியர் சங்க பிரமுகர் கண்ணனின் கொலைக்கு பழிக்குபழியாக அஜித்குமார் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
வழக்கில் அனைத்து குற்வாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தை உறவினர்கள் தொடர்ந்த நிலையில் விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ் பி மீனா அளித்த உறுதியின் பேரில் நேற்று அஜித்குமார் உடலை பெற்று சென்றனர். இறுதி சடங்கு செய்து உடல் தகனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக கலைஞர் நகர் பகுதி மற்றும் மயிலாடுதுறை நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.