புதுச்சேரி: புதுவை ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சாலமன் (23), பெயிண்டர். இவர் பிரியதர்ஷினி என்பவரை 4 மாதத்திற்கு முன் தான் காதலித்து மணம் முடித்திருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் இவர் தமிழக பகுதியான நாவற்குளம் பகுதியில் உள்ள டீக்கடை முன்பு நின்றிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் துரத்தியது. உயிருக்கு பயந்து வேகமாக ஓடினார். 3 தெருக்கள் தாண்டி எம்ஜிஆர் நகர் பிரியதர்ஷினி வீதியில் சாலமனை அந்த கும்பல் மடக்கிப் பிடித்து சரமாரி வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.தகவலறிந்த கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர், உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி, அது யாருடையது? என்பதை ஆய்வு செய்தனர்.முதல்கட்ட விசாரணையில், புதுச்சேரி கோரிமேடு அடுத்த தமிழகப் பகுதியான நாவற்குளத்தை சேர்ந்த ரவுடி ரகு உள்ளிட்ட 7 பேர் கும்பல் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. ரகு மீது தமிழகப் பகுதியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சாலமனும், ரகுவும் நண்பர்கள் ஆவர். நண்பர்களில் ஒருவருக்கு ரகு பணம் கொடுத்துள்ளார். பணத்தை திரும்பத் தராததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நண்பருக்கு ஆதரவாக சாலமன் செயல்பட்டுள்ளார். இதனால் சாலமனுக்கும், ரகுவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் சாலமன் வீட்டின் அருகே அவருடன் ரகு மற்றும் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ரகு உள்ளிட்ட கும்பல், அவரை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது. …