புதுக்கோட்டை, மார்ச்7: புதுக்கோட்டை பிச்சுத்தாம்பட்டியில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை பிச்சுத்தாம்பட்டி பாரதிதாசன் தெருவில்பல நூறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அந்த பகுதியில் சாலை ஓரத்தில் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் நட்டு பல வருடங்கள் ஆனதால் பல்வேறு இடங்களில் சில இடங்களின் மின்கம்பங்கள் சேதமடைந்து விட்டது. குறிப்பாக ஒரு சில இடங்களில் மின் கம்பங்களில் உள்ள சிமின்ட் பூச்சுகள் உதிர்ந்து உள்ளே உள்ள இரும்பு கம்பி தெரிகிறது. இதனால் அந்த கம்பி வழியாக மின்சாரம் பாயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள் மாலை நேரத்தில் அந்த பகுதியில் தெருவில் விளையாடும் போது மின்சாரம் பாய்ந்தால் பிரச்னை ஏற்பட்டு விடும். இது குறித்து அந்த பகுதியில் உள்ள மின்வாரியத்தில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் புகார் மனு அளித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இனியாவது ஆபத்தை உணர்ந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மின்வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.