ஈரோடு,மார்ச்23: ஈரோடு அருகே ஆர்.என்.புதூர், சி.எம்.நகர் பொதுமக்கள் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள், ஆர்.என்.புதூர், சி.எம்.நகரில் காது கேளாதோர் பள்ளி அருகே வசித்து வருகிறோம். எங்கள் குழந்தைகள், அருகே உள்ள ஜவுளி நகரில் உள்ள பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் வழக்கம்போல, பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்பியபோது, ஒரு கும்பல் காரில் வந்து, ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை காரில் கடத்த முயன்றனர்.
கூட்டமாக வந்த குழந்தைகள் கூச்சலிட்டதால், அங்கிருந்த அக்கும்பல் காரில் வேகமாக தப்பி சென்றுவிட்டனர்.ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி, காரில் வந்தவர்களை துரத்தி பிடிக்க முயன்றோம் முடியவில்லை. கடத்த முயற்சி செய்யப்பட்ட மாணவ, மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு,ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, கடத்தலில் ஈடுபட முயன்ற கும்பலை கண்டுபிடிக்க வேண்டும்.மேலும், பாதுகாப்புக்காக பள்ளி அருகே கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். பள்ளிக்கு சென்று வர பஸ் வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.