சமயபுரம், ஆக.20: சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலை உள்ள ஒய் ரோடு பகுதியில் தடுப்புசுவரில் பைக் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் பாலாஜி (54). இவரது சொந்த ஊர் மதுரை பழங்கானத்தம் ஆகும். சமயபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
பாலாஜி நேற்றுமுன்தினம் தனது பைக்கில் வேலைக்கு சென்று விட்டு வேலை முடிந்து திருச்சியிலிருந்து சமயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நம்பர் 1 டோல்கேட் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒய் ரோடு அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சிமெண்ட் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.