திருமயம். மார்ச் 26: திருமயம் அருகே அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி அம்பாள்புரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, சிறிய மாடு என பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதலாவதாக நடத்தப்பட்ட பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் முதல் பரிசை எட்டியமங்களம் பங்கசம் கணேசன், 2ம் பரிசு பரளி சித்தார்த், 3ம் பரிசு கே.புதுப்பட்டி சிவராமன், 4ம் நடுக்காவேரி கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 22 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தயமானது இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை மணச்சை புகழேந்தி, மாவூர் ராமச்சந்திரன், 2ம் பரிசு பொய்யாதநல்லூர் ஹபிப் முகமது, அறந்தாங்கி தொட்டிச்சியம்மன், 3ம் பரிசு பள்ளத்தூர் ஹரிகிருஷ்ணன், எஸ்பி பட்டணம் ரபீக், 4ம் பரிசு காரைக்குடி கருப்பண்ணன், சாக்கோட்டை தம்பா ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன. பந்தயம் நடைபெற்ற நெடுங்குடி-கீழாநிலைக்கோட்டை சாலை பகுதியில் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்பாள்புரம் கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.