தா.பழூர், மார்ச்26:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அண்ணங்காரபேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் போதிய கட்டிட வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. இதனையடுத்து ஜெயங்கொண்டம் எம்எல்ஏ புதிய கட்டிடம் அமைக்க பூமி பூஜை போட்டு புதிய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். தற்பொழுது பள்ளி இருந்த இடத்தில் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வரும் நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தற்பொழுது ஆதிச்சனூர் பள்ளி தலைமை ஆசிரியராக உள்ள பழனிராஜன் மற்றும் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் கணினி பொறியாளர் முருகன் ஆகியோர் தலா ரூ. 20000 வீதம் 40 ஆயிரம் மதிப்பிலான 6 டெஸ்க்குகளும், 6 பெஞ்சுகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதனை அடுத்து மாணவர்கள் தற்பொழுது புதிய பெஞ்சுக்களில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இதனை அப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி முன்னிலையில் பள்ளிக்கு வழங்கினர். மேலும் அண்ணங்காரபேட்டை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை மரம் நடுதல், மாணவர்கள்நிழலில் அமர்ந்து படிக்க சிமென்ட் கொட்டகை அமைத்தல் போன்ற வசதிகளை அவ்வப்போது செய்து வருகின்றனர். முன்னாள் மாணவர்களின் இந்த செயலை அப்பகுதியில் உள்ள பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.