விசாகப்பட்டினம்: எனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவை போன்ற ஊழல் கட்சியை பார்த்ததில்லை என்று ஆந்திரா அமைச்சர் காட்டமாக தெரிவித்தார். ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கும் வரும் 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சிக்கும், தெலுங்கு தேசம் தலைமையிலான பாஜக, நடிகர் பவன் குமாரின் ஜனசேனா கட்சியின் கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆந்திர கல்வி அமைச்சரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவருமான சத்தியநாராயணா அளித்த பேட்டியில், ‘பாஜக செய்யும் ஊழலை போன்று வேறு எந்த கட்சியும் செய்யவில்லை. எனது அரசியல் வாழ்க்கையில், பாஜகவை போன்ற ஊழல் கட்சியை நான் பார்த்ததில்லை.
மோடி தனது பிரதமர் பதவிக்கான அந்தஸ்தை குறைத்து வருகிறார். பிரதமர் மோடி ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவர் யாரோ எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை அப்படியே படித்துக் காட்டுகிறார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மக்களுக்கான ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது. பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் கொள்ளை கூட்டணி வைத்துள்ளன. இந்த கூட்டணி ஊழலில் பங்குதாரர்களாக உள்ளன. மாநிலத்தில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்று பிரதமர் மோடிக்கு தெரியவில்லை. ஆந்திராவில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி ஆட்சிக்கு வராது’ என்றார்.