புனே: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு ‘பூஜை’ செய்த மகாராஷ்டிர மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சகங்கர் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதிக்கு உட்பட்ட கடக்வாஸ்லா பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் நேற்று தேர்தல் நடந்தது. முன்னதாக தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சகங்கர் உள்ளிட்ட சிலர் வாக்குச்சாவடிக்கு வந்தனர். அவர்கள் வாக்குச்சாவடியில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு ‘பூஜை’ செய்தனர்.
அதிர்ச்சியடையந்த வாக்குச்சாவடி அதிகாரிகள், அவர்களின் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் அவர்கள் பூஜைகளை செய்துவிட்டு திரும்பினர். இவ்விவகாரம் தொடர்பாக வாக்குச்சாவடி அதிகாரி அளித்த புகாரின் பேரில், மகளிர் ஆணையத் தலைவி ரூபாலி சகங்கர் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரசின் (சரத்பவார்) தலைவரான சரத் பவாரின் மகளும் சிட்டிங் எம்பியுமான சுப்ரியா சுலே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து துணை முதல்வரான அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.