திருப்பூர், ஆக.19: திருப்பூர் மாநகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாநகராட்சி 11வது வார்டு பகுதியான திலகர் நகரில் மின் வாரியத்தின் மூலம் புதை வட மின்கம்பி அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால், இப்பகுதியில் தார்சாலை அமைக்க ஆரம்ப பணிகள் துவங்கிய நிலையில், புதைவட மின் கம்பி அமைக்கும் பணியின் காரணமாக சாலை மேம்பாடு செய்ய இயலவில்லை.
புதைவட கம்பி அமைக்கும் போது குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் விநியோகம் முறையாக செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை தீவிரப்படுத்தக்கோரி வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு அனுப்பர்பாளையம் மின்வாரிய அலுவலகத்தை பூட்டு போட்டு அடைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.