திருப்புத்தூர், அக். 7: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை யோக பைரவர் சன்னதி முன்பு ஏராளமான பெண்கள் வெண்பூசணி, தேங்காய், எலுமிச்சம் பழம், மண் விளக்கு உள்ளிட்டவைகளில் நெய் மற்றும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், தயிர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து யோகபைரவர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருப்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.