‘‘மாங்கனி மாவட்டத்துல சேலம்காரர் ஒதுக்கிய மூத்த நிர்வாகிகளை தேடி பிடித்து தேனிக்காரர் பதவி கொடுக்கிறாராமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலம்காரர் பதவிக்கு வந்த வேகத்துல கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் பொறுப்புகளை வாரி வழங்கினார். அதே சமயம் தன் நம்பிக்கைக்கு உரியவராக இல்லாத நபர்களை கட்டம் கட்டி உறுப்பினர் என்ற வகையில் ஒதுக்கி வைத்துள்ளாராம். இதனால அந்த மூத்த நிர்வாகிகள் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்களாம். இதை தான் தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறாராம் தேனிகாரர். சேலம் மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் சேலம்காரர் ஒதுக்கிய முக்கிய நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், எம்ஜிஆர்கால ஆட்கள், ஜெயலலிதா கால ஆட்களை ஆட்களைவிட்டு தேடச் சொல்லி இருக்கிறாராம். இதனால, அவரது அடிபொடிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் இலை கட்சியின் தலைவர்களின் வீட்டிற்கே சென்று சந்தித்து பேசி தேனிகாரர் அணியில் சேர சொன்னார்களாம். சிலர் மட்டும் பதவிக்கும், கரன்சிக்கும் தலையாட்டினாங்களாம். பெரும்பாலானோர், இரண்டில் ஒரு முடிவு தெரியட்டும்… அப்புறம் கட்சியில் தீவிர பணியாற்றுவது… யாருக்காக பணி ஆற்றுவது என்பதை முடிவு செய்யலாம் என்று சொல்லிட்டாங்களாம். இதனால தான் தேனிக்காரர், தனது ஆதரவாளர்களை மா.செ.க்களாக நியமித்து வாறாராம். மாங்கனி மாவட்டத்துலயும் தேனிக்காரர் ஆதரவாளர்களை தேடிக்கிட்டிருக்காராம். ஆரம்பத்துல கட்சி ரெண்டா உடஞ்சப்போ, சேலத்துல முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் தேனிக்காரரிடம் ஓடிட்டாங்க. அப்படி நம்பி வந்தவங்களை கைவிட்டதால இப்போ மாங்கனிக்காரருடன் ஒட்டிக்கிட்டாங்க. அதனால பலரும் வெயிட் பண்ணுங்க, நான் யோசித்து சொல்றேன்னு வந்தவங்களை வழி அனுப்பி விடறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரன்சி, பிரியாணி கொடுத்தது எல்லாம் வேஸ்ட் ஆச்சு… தலைமையிடம் இருந்து டோசும் விழுந்தாச்சுனு யாரு புலம்புறா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தாமரை கட்சியின் மாநில தலைவர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சமீபத்தில் நடந்தது. முன்னதாக, ஆர்ப்பாட்டத்துக்கு திராளான தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என மேலிடத்தில் இருந்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். இதனால் அதிர்ச்சிக்குள்ளான நிர்வாகிகள், வேறுவழியின்றி முதல்நாளே தொண்டர்களை நேரில் சந்தித்து ‘விட்டமின் ப ’ மற்றும் சம்திங்கும் அவர்களது கையில் இருந்து கொடுத்தார்களாம். அப்படியிருந்தும், எதிர்பார்த்த கூட்டம் வரவில்லையாம். இது நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். ‘‘விட்டமின் ப’’ கொடுத்தும் கூட்டத்தை கூட்ட முடியவில்லையே. வாங்கிய பிரியாணியும் வேஸ்டாக போச்சே என்று புலம்பினாங்களாம். அதற்கு அடிமட்ட நிர்வாகிகள் கரன்சியை 2 வாரத்துக்கு முன்பாக கொடுத்து இருக்கனும். அதைவிட்டுவிட்டு ஒரு நாளைக்கு முன்பாக கொடுத்தால் எப்படி… கூட்டத்தை சேர்ப்பது என்பது ஏடிஎம் மிஷினா கார்டு போட்ட உடனே பணம் வருவதுபோல, கரன்சி கொடுத்தவுடனே பொதுமக்களை ஒரே இடத்தில் சேர்ப்பதற்கு… பணம் வாங்கிய பலர் வரவில்லை. பலர் பணமே வேண்டாம் எங்களிடம் ஆட்கள் இல்லை என்று சொல்லிவிட்டார்களாம். இதனால கொடுத்த கரன்சி வீணாக கரைந்துவிட்டதே … தலைமையும் நம்மளை ேடாஸ் விட்டுவிட்டதே என்று புலம்பி தள்ளினார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மதில் மேல் பூனையாக தவிக்கிற தலைவர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட இலைக்கட்சி டீமில் தேனி அணிக்கு ஆட்களே இல்லாத நிலை உள்ளது. 98 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் சேலம் அணியில்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு மாஜி எம்எல்ஏ மட்டும் எந்த முடிவும் எடுக்காமல், மதில்மேல் பூனையாக தவிக்கிறார். இவரை சுற்றியிருந்த ஆதரவாளர்கள் எல்லோரும் விலகிச்சென்றுவிட்டதால், தனி மரமாக உள்ளார். கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் அவ்வப்போது இவரையும், இவரது மகனையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால், இவர் கடும் பீதியில் இருக்கிறார். எந்த அணி பக்கம் சென்றாலும், நமக்கு தொல்லைதான் என தனது சகாக்களிடம் பேசி வருகிறார். கொஞ்சம் காத்திருந்து, கடைசியில் சேலம் அணியில் சேர்ந்துவிட வேண்டியதுதான். அதுதான் தன் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு என்று நினைத்து தற்போது நினைத்து அமைதி காக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பூட்டு மாவட்டத்தை சேர்ந்த மாஜி சர்க்கரையான அமைச்சர் உண்மையிலேயே இலை கட்சியில் தான் இருக்கிறாரா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு பெயர் பெற்ற ஊரில் இலைக்கட்சியினர் சார்பில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உளறல் புகழ் முன்னாள் மந்திரியானவர் பங்கேற்றார். இதற்கென இரவு முழுக்க அரசு மருத்துவமனை துவங்கி ஆர்ப்பாட்டம் நடந்த கல்லறைத்தோட்ட பகுதி வரையிலும் ரோட்டின் இருபுறமும் வழிநெடுக கொடிக்கம்பங்களை கட்டி வைத்திருந்தனர். கொடிகளைக் கண்ட அத்தனை பேருமே அதிர்ந்து போய் விட்டனர். கருப்பு, சிவப்பு கொடியில், நடுவில் வெண்மை நிறத்தில் அண்ணாவின் உருவம் பொறித்த அதிமுக கொடி பறப்பதற்குப் பதில், கருப்பு, வெள்ளை, சிவப்பு என மூவர்ணத்தில் கொடி இருந்தது. அண்ணா படம் இல்லை. கட்சியின் நிஜ கொடியை கட்டாதது தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. மேலும், கட்சி போஸ்டர்களில் மறைந்த முதல்வரின் படமும் இல்லையாம். இது இலைக்கட்சியினரை டென்ஷனாக்கி இருக்கிறது… மேடை பேச்சியில் தான் உளறுகிறார் என்று பார்த்தால், கட்சியின் படம், கொடி விஷயத்திலும் குழப்பம் ஏற்படுத்துகிறார் என்று நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்…’’ என்றார் விக்கியானந்தா….
தாமரை தலைவரை அழைக்க கொடுத்த கரன்சி கரைந்து போன ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா
previous post