திண்டுக்கல், செப். 26: திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கை 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டியும், தற்போது ரூ.2000 நோட்டுக்களை மாற்ற கால அவகாசம் முடியும் தருவாயில் உள்ளதன் காரணமாகவும் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் மேற்பார்வையில், கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள் வாசு, பிரபாகரன், சுசீலா, கோயில் செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் கண்ணன் மற்றும் இந்து திருக்கோயில் ஆன்மீக சேவை குழு, பொதுமக்கள் என பலர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்கமாக 22 லட்சத்து 60 ஆயிரத்து 517ம், தங்க நகைகள் 26 கிராம், வெள்ளி நகைகள் 112 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.