திருச்சி: முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய யூடியூபர் சங்கர் மீது திருச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பாஜ ஓபிசி அணி செயலாளர் சூர்ய சிவா நேற்று புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் பாஜவிற்கு வந்த பிறகு 32 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு சிறை காவலராக செந்தில்குமார் இருந்தார். அவர் நேர்மையானவர், சட்ட விதிகளை உட்பட்டு நடந்து கொண்டார். யூடியூபர் சங்கர் பல இடங்களில் பகைகளை சம்பாதித்து வைத்துள்ளார். இன்றைக்கும் அவர் எடப்பாடி பழனிசாமிக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார். ஆகையால் தான் பல்வேறு விமர்சனங்களை யூடியூபில் வெளியிட்டு வருகிறார்.
கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். விபத்துக்குள்ளான காரை ஓட்டி சென்றது மல்லிகா நல்லுசாமி என்ற பெண். யூடியூபர் சங்கரின் நெருங்கிய நண்பர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு எடுக்கக்கூடிய அதிகாரிகள் அனைவரையும் ஒருசில காரணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். யூடியூபர் சங்கர், பல விஷயங்களில் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது. சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பாதுகாப்பில் இருப்பதே யூடியூபர் சங்கருக்கு பாதுகாப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.