மதுரை: தேர்தல் முடிவுக்கு பின் தலைமையில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு அதிமுக தலைவர்கள் பரபரப்பு பதில் அளித்துள்ளனர். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349வது சதய விழாவையொட்டி மதுரை ஆனையூரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்தபின் ராஜன் செல்லப்பா எம்எல்ஏவிடம் நிருபர்கள், ‘‘தேர்தல் முடிவுகளுக்கு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று கூறப்படுகிறதே’’ என்றனர். இதற்கு அவர், ‘‘எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்பட்டு வருகிறார். மிகப்பெரிய ராஜ தந்திரியாக பணியாற்றி வருகிறார்.
அதிமுகவை காப்பாற்றுவதற்காக அவர் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார், அதிமுக தலைமை மாற்றம் என வரும் செய்திகள் தவறானவை. மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் பதவி கொடுப்பதற்கு எடப்பாடிக்கு முழு அதிகாரம் உள்ளது’’ என்றார். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம் சுந்தரகுண்டு கிராமத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ‘‘வரும் 4ம் தேதி மக்கள் அளிக்கும் தீர்ப்பு வந்த பின்பு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி யாரை கை நீட்டுகிறாரோ, அவர் தான் இந்திய பிரதமராக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’’ என்றார்.