‘‘பவர்ல இருந்தாலும், பணம் இருந்தாலும் டெல்லியின் சூப்பர் பவர் முன் நிற்க முடியாமல் புல்லட்சாமி ஏன் தவிக்கிறார்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புல்லட்சாமி ஆட்சி நடக்கும் மாநிலத்துல சமீபகாலமாக அங்கு நடக்கும் நிகழ்வுகளால், அவர் மனம் நொந்து நிற்கிறார். நான் சிஎம் ஆன பிறகு இந்த மாநிலத்தை பாரீஸ் நகரைப்போல மாற்ற, ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வாங்கி கொடுப்பாங்கன்னு பார்த்தா, நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஒருத்தரு, புல்லட்சாமி முன்பாகவே முதல்வராக நடந்து கொள்கிறாராம். இதைப்பார்த்து மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாமல் புல்லட்சாமி தவியாய் தவிச்சுப்போனாராம். இந்நிலையில் தான் அந்த சம்பவம் நடந்தது. திடீரென ஒரு நாள் நள்ளிரவு 10 மணிக்கு திடீரென மாங்கனி சிட்டிக்கு ஓடி வந்தாராம். அங்கு அவருக்கு அமைதியை கொடுக்கும் சுவாமியை பார்த்ததும் ரொம்பவே உருகிட்டாராம். என்றாலும் அவருக்குள் இருக்கும் விரக்தியில சுவாமியின் பாதத்தை பிடிச்சுக்கிட்டு பலமணி நேரம் விடவே இல்லையாம். தனது மாநிலம் படும் பாட்டை, நினைத்து கண்ணில் தண்ணி பொங்கிச்சாம். மனதில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் சுவாமியிடம் சொல்லி அதிலிருந்து மக்களை காப்பாத்தணும்ன்னு மனமுருக வேண்டினாராம். இப்படி மனம் சஞ்சலப்பட்டு இதுவரை புல்லட் சாமியை இங்க யாரும் பார்க்கலையாம். இப்படியே சுமார் ரெண்டு மணி நேரம் கோயிலில் இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றாராம். இதற்கு எல்லாம் டெல்லி தான் காரணம். பதவியில் உட்கார வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்காமை, குடைச்சல் கொடுப்பது என்று தொடர்வது நிற்க வேண்டும் என்று வேதனையுடன் சொன்னபடி சொந்த மாநிலத்துக்கு கிளம்பியதாக, அங்கிருந்த அடிபொடிகள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெல்லி பெயரை பயன்படுத்தி இயற்கையை அழித்த நபரை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் முடிவில் தூங்கா நகர் பெயரில் முடியும் ஊர் வழித்தடத்தில் கருவேல மரங்கள் அதிகம். இம்மரங்கள் அருகிலுள்ள மின்பாதையை உரசும் என்பதால், அகற்ற முடிவானது. இதனை மோப்பம் பிடித்த சிலர் இங்கிருந்து 4 மார்க்கங்களின் இருப்புப்பாதையை ஒட்டி இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற டெண்டர் விட்டாங்க. 600 டன் விறகு கிடைக்கும் என்ற ஆவலில் டெண்டரில் பங்கேற்க 400க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். இம்மரங்களை வெட்டினால் எக்கசக்கமாக லாபம் கிடைக்கும் என கணக்குப்போட்ட ஒன்றிய அரசுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர் ஒருவர், டெண்டர் ஷெட்யூல் வாங்கியவர்களிடம் கூடுதலாக ஒரு தொகை பேசி கரெக்ட் செய்து விட்டாராம். பிறகு, டெண்டர் எடுத்தவர் இந்த நான்கு மார்க்கங்களிலும் கருவேல மரங்களுடன், வேப்பமரம், இயல்வாகை, ஆலமரம், அரச மரம் என இருப்புப்பாதை இடத்திற்குள் நின்ற விலை உயர்ந்த அத்தனை மரங்களையும், வெட்டி எடுத்து சென்று விட்டனர். ஆய்வுக்கு போன அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து கேட்டபோது, தாமரைக் கட்சிக்காரர்கள் எல்லாம் தமக்குத் தெரிந்தவர்களாக காட்டிக் கொண்டதுடன், போய் புகார் செய்து கொள்ளுங்கள் எனவும் மிரட்டலாக கூறி உள்ளார். தொடர் புகார்கள் எதிரொலியாக இப்போது இப்பிரச்னையை விஜிலன்ஸ் துறை கையிலெடுத்திருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசு அதிகாரியை மாற்றியதால் எம்எல்ஏ, அமைச்சர்கள் எல்லோரும் குஷியாக இருக்காங்களாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி ஆளும் அரசுக்கு பல்வேறு குடைச்சல் கொடுத்து வந்த நிதி செயலரை மாற்ற சபையின் நாயகர் முதல் அமைச்சர்கள் வரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெரும் முயற்சி எடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு அழுத்தம் காரணமாக நிதி செயலர் பிரசாந்தை தூக்கியடித்தது ஒன்றிய அரசு. இதில் அமைச்சர்களுக்கு ஏகப்பட்ட குஷியாம். எப்பா, தொல்லை ஒழிந்தது. எப்ப கோப்பு அனுப்பினாலும், நிதி இல்லாமல் எதுக்கு இந்த திட்டம், இது தோல்வியடைந்த திட்டம் என ஏதாவது கோப்பில் எழுதி முட்டுகட்டை போட்டுவிடுவாராம். இதில் குறிப்பாக ரேஷன் கடை வைத்திருக்கும் அமைச்சருக்கு தீபாவளி சிறப்பங்காடி திறக்க கோப்பு அனுப்பியபோது, கடந்த ஆண்டு பொருட்கள் வாங்கிய கடனையே திருப்பிச்செலுத்தவில்லை. இதில் தற்போது எதற்கு தீபாவளி சிறப்பங்காடி என்றும், பருப்பு, சர்க்கரை எங்க வாங்கறீங்க, என்ன விலையென்று கேட்டு பந்தாடினார். தற்போது அவர் மாற்றப்பட்டு விட்டதால், தீபாவளி சிறப்பங்காடி திறக்க அனுமதி கிடைச்சதாம். இதனை கேள்விப்பட்ட அமைச்சர்கள், ரேஷன் கடை அமைச்சரை பார்த்து இவரை போல எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் இறைவா என கமெண்ட் அடித்தனராம். அதுக்கு இனிமேல் நம்ம எல்லோருக்கும் நல்ல நேரம்தான் என தாமரை அமைச்சர் பதில் அளித்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ டாஸ்மாக் பார் எடுத்த 2 எழுத்து இலைகட்சிக்காரரை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் சிட்டியில கடந்த காலத்துல, இலைகட்சியில இருக்குற கலை இலக்கிய பிரிவுல, 2 எழுத்துக்காரர் ஒருத்தர் பார் டெண்டரை எடுத்தாராம். மாவட்டத்துல இருக்குற பார்கள்லயே அந்த பார்லதான் நல்ல வருவாய் கொட்டுச்சாம். காரணம் சிட்டி சென்டர்ல இருக்காம். இதனால, அந்த பார் டெண்டர் எடுக்குறதுக்காக சமீபத்துல பலபேர் போட்டி போட்டாங்களாம். பணம் கொட்டுறத தட்டிவிட முடியுமா… முட்டி மோதி, பல எதிர்ப்புகளையும் மீறி அந்த பார் டெண்டரை, மீண்டும் அந்த 2 எழுத்துக்காரரே எடுத்திருக்காராம்… முக்கிய புள்ளிகள் மோதிப்பார்த்த இடத்துல, இலைகட்சியைச் சேர்ந்தவர் டெண்டர் எப்படி எடுத்தாருன்னு, சொந்தகட்சிக்காரங்களே வியந்துபோய் இருக்காங்களாம். ஆட்சியில இல்லாத போதும் செல்வாக்கு காட்டுறாரே, செல்வத்தை பெருக்கிக்கிட்டே போறாரேன்னு இலை கட்சிக்காரங்களே வியப்பாக பேசிக்கிறாங்களாம். ரன்னிங் பொலிடிகல் பார்ட்டி ஒருத்தர் தான் இவருக்கு புல்சப்போர்ட் செய்றாராம். அதனாலத்தான், டெண்டரை பிடிச்சிருக்காருன்னு விவரம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா….