சேத்தியாத்தோப்பு, ஜன. 30: சேத்தியாத்தோப்பில் பட்டப்பகலில் மயக்க மருந்து அடித்து மூதாட்டியிடம் 10 பவுனை கொள்ளையடித்த சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேத்தியாத்தோப்பு முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் கமலா(70). இவர் தனது மகளுடன் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மகள் சென்னைக்கு சென்றநிலையில், கமலா மட்டும் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கமலா வீட்டிற்கு சென்று, அவரது முகத்தில் மயக்க மருந்தை அடித்தனர். இதில் அவர் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். பின்னர் அவரது கழுத்து மற்றும் காது, மூக்கில் இருந்த 10 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த நகைகளையும் திருடி சென்றுள்ளனர். இதையடுத்து மூதாட்டி மயக்கம் தெளிந்து நடந்ததை அறிந்து சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் ஹூப்பர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த நாய் திருட்டு நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர் ஸ்ரீதர் வந்து தடயங்களை சேகரித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.