கோவை: கோவையில் திருநங்கையிடம் அத்துமீறிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை அம்மன் குளம் பகுதியை சேர்ந்த 30 வயதான திருநங்கை ஒருவர் தனது செல்போன் காணாமல் போய்விட்டதாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் 50 வயதான போலீஸ்காரர் திருநங்கையின் வீட்டிற்கு சென்றார். அங்கு திருநங்கையிடம் செல்போன் எப்படி காணாமல் போனது? எங்கே செல்போன் எடுத்து சென்றீர்கள்? என விசாரித்தபடி அவரது கையை பிடித்து இழுத்து அத்துமீறியதாகவும், அநாகரீகமாக பேசியதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக திருநங்கை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். ‘‘விசாரணைக்கு வந்த போலீஸ்காரர் போதையில் ஆபாசமாக நடந்து கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என புகாரில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரில் சிக்கிய போலீஸ்காரர் தலைமறைவானதாக தெரிகிறது….