புதுடெல்லி: சமூக ஊடகங்களில் அதிகளவில் பாலோயர்களை கொண்டவர்கள், கண்ட கண்ட பொருட்களை விளம்பரம் செய்வதையும், போலி விமர்சனங்கள் பதிவிடப்படுவதையும் தடுக்க, ஒன்றிய அரசு விரைவில் அதிரடி கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது. சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களை ‘இன்ப்ளூயன்சர்கள்’ என்கிறோம். அதாவது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்களைக் கொண்டவர்கள் அவர்கள் தங்கள் பதிவுகள் மூலமாக சில பொருட்களை விளம்பரம் செய்வதுண்டு. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பணம் பெறுவார்கள். பாலோ செய்பவர்கள், விளம்பரப்படுத்தும் பொருட்களை வாங்கி உபயோகிக்கின்றனர். இதுவரை இதுபோன்ற இன்ப்ளூயன்சர்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்ப்ளூயன்சர்களுக்கும் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக அடுத்த 15 நாட்களில் புதிய வழிகாட்டுதல்கள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய வழிகாட்டுதலில், இன்ப்ளூயன்சர்கள் எந்த பிராண்டிடம் இருந்து பணம் பெற்று அவர்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகிறார்கள் என்பதை பகிரங்கமாக தங்கள் பதிவில் வெளியிட வேண்டும். மேலும், அந்த பதிவுகளில் பொறுப்பு துறப்பு அறிவிப்பையும் அவர்கள் வெளியிட வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் வர உள்ளது. இதுதவிர, இ-காமர்ஸ் இணையதளங்களில் வெளியிடப்படும் போலி விமர்சனங்களை (ரிவியூ) கட்டுப்படுத்தவும் புதிய கட்டமைப்பும் அமல்படுத்த இருப்பதாக ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …